ஜம்மு-காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோர கிரமாங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது.
இச்சம்பவங்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்து வருகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மனோகர் பாரிக்கர் விலகி கோவா தலைநகர் பனாஜியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்வானார். பின்னர் கோவா முதல்வராகப் பதவியேற்றார்.
இதையடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாதுகாப்புத்துறையை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தின் போது பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.
அவர், எல்லையோர பாதுகாப்பு அம்சத்தினை ஆய்வு செய்யும் விதமாகவும், அங்குள்ள ராணுவ வீரர்களை சந்திக்கவும், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை பார்வையிடவும் செப்டம்பர் 29, 30 தேதிகளில் 2 நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.