உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ தொகுதிக்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் சமீபத்தில் தயாரிக்கப்பட்டது.
பின்னர் பட்டியலில் தங்கள் பெயர் தொடர்பான விவரங்களைப் பெற பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டது.
அதில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் நீக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
லக்னோ தொகுதியின் பாபு பனாரசி தாஸ் வார்டுக்கான வாக்காளர் பட்டியலில் வாஜ்பாய் பெயர் இடம்பெற்றிருக்கும். தற்போது, இந்தப் பட்டியலில் இருந்துதான் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இவ்விகாரம் தொடர்பாக மண்டல அதிகாரி அசோக் குமார் சிங் அளித்த விவரத்தில் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் பாபு பனாரசி தாஸ் வார்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. கடந்த 2000-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாஜ்பாய் வாக்களித்தார். பின்னர் 2004-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களித்தார். அதுவே கடைசியாக அமைந்தது.
பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் வாக்களிக்கவில்லை. மேலும், வாஜ்பாய் நீண்ட காலமாக இந்த வார்டிலும் வசிக்கவில்லை.
எனவே தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்தார்.