புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிறிஸ்துவரோ என்று தான் சந்தேகிப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
குஜராத்தில் உள்ள கோயில்களுக்கு சமீபத்தில் சென்று வந்த ராகுல் காந்தியின் ஆன்மீகப் பயணம் குறித்து சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது, ராகுல் காந்தி, தான் ஒரு இந்துதான் என்பதை முதலில் அறிவிக்க வேண்டும் என்று சுவாமி கூறியுள்ளார்.
இந்துக்களின் வாக்குகளைக் கவரவே ராகுல் காந்தி இதுபோன்று கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறார் என்பது போல சூசகமாகக் கூறும் சுப்ரமணியன் சுவாமி, அவர் ஒரு கிறிஸ்துவரோ என்று தான் சந்தேகிப்பதாகவும் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, துவார்காதிஷ் கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி கிறிஸ்துவரோ என்று சந்தேகம் எழுப்பியுள்ள சுப்ரமணியன் சுவாமி, புது தில்லியில் ராகுல் வசிக்கும் 10, ஜன்பாத்தில் உள்ள வீட்டில் தேவாலயம் இருக்கலாம் என்றும் தான் சந்தேகிப்பதாக ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
குஜராத் சென்ற ராகுல் காந்தி, அங்கு சுரேந்திரநகரில் உள்ள சோட்டிலா கோயில், கக்வாட் கிராமத்தில் உள்ள கோடல் தாம் கோயில், ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜலராம் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.