வாபஸ் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நிராகரித்துள்ளார்.
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, வெளிநாடுவாழ் இந்தியர்கள், தங்களது கையிருப்பில் வைத்துள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கடந்த வாரம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு, வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் அவர் கலந்துரையாடினார். வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் ரூ.7,500 கோடி மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதனை மாற்றுவதற்கு மறுவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அப்போது அவர்கள் சுஷ்மாவிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
ஆனால், அதனை நிராகரித்த சுஷ்மா, பழைய நோட்டுகளை மாற்ற இனி வாய்ப்பளிக்கப்படாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தத் தகவலை ஊடகங்கள் செய்தியாக புதன்கிழமை வெளியிட்டுள்ளன.