தூய்மை இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தி அக்டோபர் 2-ஆம் தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதையொட்டி, தூய்மையை வலியுறுத்தும் 'டாய்லெட்: ஏக் பிரேம கதா' என்ற ஹிந்தித் திரைப்படத்தை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
'தூய்மையே சேவை' பிரசாரத் திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு மருத்துவமனைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் அனைத்து தரப்பிலும் வரவேற்பைப் பெற்றது டாய்லெட் திரைப்படம். இந்தப் படம், இல்லந்தோறும் கழிப்பறையைக் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதை அம்சம் கொண்டதாகும். எனவே, மத்திய அரசின் அனைத்து மருத்துவமனைகளிலும் வரும் 2-ஆம் தேதி ஒளிபரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசின் மருத்துவமனைகளில் தேவைப்பட்டால் ஒளிபரப்பலாம். மாநில அரசுகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.