புதுதில்லி: சர்க்யூட் போர்ட் உள்ளிட்ட ஸ்மார்ட் போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு 10% வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால், விரைவில் ஸ்மார்ட் போன்கள் விலை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக 'ராய்ட்டர்ஸ்' சர்வதேச செய்தி நிறுவனத்தில் கடந்த வாரம் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. அதன்படி ஸ்மார்ட் போன் தயாரிப்பில் பயன்படும் முக்கிய உதிரி பாகங்களான ப்ராசஸர்ஸ், மெமரி மற்றும் வயர்லெஸ் சிப் ஆகியவற்றை உள்ளடக்கிய 'ப்ரிண்டட் சர்க்யூட் போர்ட்' பாகங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவது தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது திங்களன்று வெளியாகியுள்ள மத்திய அரசின் அறிக்கை ஒன்றின் மூலம் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் மொபைல் கேமரா உதிரிபாகங்கள் மற்றும் கனெக்டர்களுக்கும் சேர்த்து 10& வரி விதிக்க அரசு உத்தேசித்துள்ளது.
இந்த செயலானது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உள்நாட்டு மூலப்பொருள் உற்பத்தியின் அளவை அதிகரிக்கச் செய்யும் படிப்படியான திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் திட்டமான 'மேக் இன் இந்தியா' திட்டதின் மூலம் இந்தியாவை நமது அண்டை நாடான சீனா போல ஒரு உற்பத்திக் கேந்திரமாக மாற்றும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.