தெலுங்கானா மாநிலத்தின் பேரவைத் தலைவராக ஸ்ரீகொண்ட மதுசூதனாசாரி உள்ளார். இவர் பூபாலப்பள்ளி எனும் மாவட்டத்தில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனது சொந்த தொகுதியில் புதிய கிராமப்புற சபை அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், சொந்த தொகுதிக்கு திரும்பியவருக்கு சற்றும் எதிர்பாராத சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது.
அப்பகுதியில் அமைந்துள்ள ஏர்ரப்பள்ளி எனும் கிராமத்துக்கு வந்த மதுசூதனாசாரிக்கு அவரது ஆதரவாளர்கள் அங்கு பாலாபிஷேகம் செய்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
தேவையில்லாமல் இவ்வளவு பால் வீணடிக்கப்பட்டுள்ளது. முட்டாள்கள் தினத்தன்று யார் சிறந்த முட்டாள் என்பதை நிரூபிக்க போட்டியிடுகின்றனர் என்பது போன்ற விமரிசனங்களும், கண்டனங்களும் இச்செயலுக்கு குவிந்து வருகிறது.