புதுதில்லி: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு மீதான சீராய்வு மனு விசாரணை, செவ்வாய் மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் திங்களன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு மீதான சீராய்வு மனு விசாரணை, செவ்வாய் மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் செவ்வாய் காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோயல் மற்றும் பாலி நாரிமன் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு பற்றி முறையிட்டார். அதற்கு நீதிபதி கோயல், இந்த வழக்கு குறித்து முதலில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி லலித் மற்றும் தான் அடங்கிய அமர்வு ஒன்றினை விசாரிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டால், செவ்வாய் மதியம் விசாரிப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சீராய்வு மனுவினை நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்தார். அத்துடன் விசாரணை மதியம் 2 மணிக்கு பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.