புதுதில்லி: இந்தியாவில் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு செய்யபப்ட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்து, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில், தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை செவ்வாயன்று தில்லியில் வெளியிட்டார்.
இம்முறை சிறந்த பல்கலைக்கழகம், சிறந்த கல்லூரி, சிறந்த பொறியியல் கல்வி நிறுவனம் மற்றும் மேலாண்மைப் படிப்பு நிறுவனம் உள்ளிட்ட 9 துறைகளின் கீழ் தனித்தனியே அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை என்றும் அந்த பட்டியலில் வகைப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த வரிசையில் பெங்களூருவில் உள்ள 'இண்டியன் இன்ஸ்டிடியூப் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி)' இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழகமாக நீடித்து வருகிறது. சிறந்த கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பிடித்து உள்ளது. அதேபோல் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் வரிசையில் அகமதாபாத் ஐஐஎம் முதலிடம் பிடித்து உள்ளது.
ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனம் என்ற நிலையிலும் பெங்களூருவில் உள்ள 'இண்டியன் இன்ஸ்டிடியூப் ஆப் சயின்ஸ்' நிறுவனமே முதலிடத்தை தட்டி சென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்கள் வரிசையில் சென்னை ஐஐடி இரண்டாவது இடம் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டும் இதே தரவரிசையில் இரண்டாவது இடமே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தை ஐஐடி பாம்பே பிடித்து உள்ளது. இந்த பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடம் பிடித்தது.
அதே போல் நாம் மகிழ்ச்சியடையும் வகையில் நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடிக்கிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.