புதுதில்லி: போலி செய்தி வெளியிட்டால் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று திங்களன்று வெளியான மத்திய செய்தி மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் அறிவிப்பை திரும்பப் பெறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய செய்தி மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் சார்பாக திங்களன்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி போலி செய்திகளை உருவாக்கி வெளியிடும் மற்றும் பரப்பும் செய்தியாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
இவ்வாறு ஏதேனும் புகார்கள் பெறப்பட்டால் அதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி முதலில் ஊடக ஒழுங்குமுறை அமைப்புகளான 'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' மற்றும் 'நேஷனல் ப்ராட்கேஸ்ட்டர் அசோசியேஷன்' ஆகிய அமைப்புகளுக்கு அனுப்பப்படும். அவர்கள் அந்தப் புகாரின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் வரை சம்மந்தப்பட்ட பத்திரிகையாளரின் அங்கீகாரம் தாற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
பின்னர் அவர்கள் மீதான தவறு உறுதி செய்யப்பட்டால் முதல்முறை என்றால் அவர்களது அங்கீகாரம் ஆறு மாதங்களும், இரண்டாவது முறை என்றால் ஒரு வருடமும் ரத்து செய்யப்படும். அதற்கே மேலே என்றால் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி தரப்பில் இந்த அறிவிப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திங்களன்று வெளியான மத்திய செய்தி மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் அறிவிப்பானது திரும்பப் பெற்றுக் கொள்வதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி செய்தி தொடர்பான விவகாரங்களில் 'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' முடிவெடுப்பதே சரியாக இருக்குமென்றும் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.