புதுதில்லி: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்த சர்ச்சையில் மறுதேர்வு நடத்தப்படாது என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கின. இதில் பிளஸ்-2 தேர்வில் பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத் தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல்கள் பரவின.
முதலில் திட்டவட்டமாக மறுத்து வந்த சிபிஎஸ்இ வாரியம், அதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டபோது பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன் பின்னர், +2 வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கான வினாத்தாள்கள் கசிந்ததை வாரியம் ஒப்புக் கொண்டது. அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் வினாத்தாள்களை கசிய விட்டதாக, தில்லியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்டிலும் 6 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் வினாத்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ பிளஸ் 2 பொருளாதார தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்தது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்த சர்ச்சையில் மறுதேர்வு நடத்தப்படாது என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவர்களின் நலன் கருதி தில்லி மற்றும் ஹரியானா உள்ளிட்ட நாட்டின் எந்த பகுதியிலும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.