கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் புதன்கிழமை கோலாகலமாத் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய தரப்பில் 227 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். துவக்க விழாவில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் இந்திய தரப்பில் பிரபல நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசியக் கொடி ஏந்தி தலைமை வகித்தார்.
இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது:
கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள். நமது வீரர்கள் கடும் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது அவர்களின் திறமையை வெளிப்படுத்த சரியான தளமாகும் என்றார்.