பெங்களூரு: இந்தியாவில் அலைபேசி செயலி வழி வாடகை வாகன சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனமானது, தனது வாடிக்கையாளர்களுக்கு பயணக் காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக ஓலா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி விஷால் கவுல் வியாழன் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இனி ஓலா நிறுவன சேவையைப் பயன்படுத்துபவர்களுக்காக பயணக் காப்பீட்டுத் திட்டமானது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி நகருக்குள் பயணம் செய்பவர்கள் ரூ. 1 என்ற கட்டணத்திலும், 'ஓலா ரெண்டல்' சேவையை பயன்படுத்துபவர்கள் ரூ.10 என்ற கட்டணத்திலும், வெளியூர்களுக்கு 'ஓலா அவுட்ஸ்டேஷன்' சேவையை பயன்படுத்துபவர்கள் ரூ.15 என்ற கட்டணத்திலம் காப்பீடு சேவையைப் பெறலாம்.
இதற்காக மும்பையைச் சேர்ந்த அக்கோ பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்ட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யயப்பட்டுள்ளது. ரூ.1 இதற்காக செலுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் வரையிலான பயன்களைப் பெறலாம்.
பயணிகள் தங்கள் பயணத்தின் பொழுது பொருட்களிழப்பு, லேப்டாப்கள் இழப்பு, தவற விட்ட உள்ளூர் விமான சேவைகள், விபத்துக்கான மருத்துவக் காப்பீடு மற்றும் அவசரகால பயண ஊர்திக் காப்பீடு ஆகியவற்றின் கீழ் பயனடையலாம்.
இந்த காப்பீட்டுக் கோரிக்கையினை ஓலா செயலி, அக்கோ பொதுக் காப்பீட்டு நிறுவன இணையத்தளம், அதன் செயலி மற்றும் அதன் சேவை மையம் வாயிலாக சமர்ப்பித்து இந்தப் பயன்களைப் பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.