புதுதில்லி: 'இந்தியாவே காத்திருக்கிறது; பேசுங்கள்' என்று நாட்டையே உலுக்கியுள்ள கத்வா மற்றும் உன்னாவ் பாலியல் வழக்குகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் நாடோடி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா பாஜக பிரமுகர்கள் மற்றும் காவல் துறையினரால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது
அதேபோல உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக எம்.எல். ஏ குல்தீப் சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்நிலையில் 'இந்தியாவே காத்திருக்கிறது; பேசுங்கள்' என்று நாட்டையே உலுக்கியுள்ள கத்வா மற்றும் உன்னாவ் பாலியல் வழக்குகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
பிரதமர் அவர்களே, உங்களது மவுனம் ஏற்றுக் கொள்ள முடியாதது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? ஏன் பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்டவர்களும், கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் மாநில அரசுகளால் பாதுகாக்கப்படுகிறாரகள்? இந்தியாவே காத்திருக்கிறது; பேசுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.