நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஜேட்லிக்கு உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரால் பதவியேற்க முடியவில்லை.
இந்நிலையில், தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவைத் தலைவர் அறையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஜேட்லி பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜேட்லிக்கு, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
65 வயதாகும் ஜேட்லி, உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு இந்த முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9-ஆம் தேதி டயாலீசஸ் சிகிச்சைக்காக தில்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து தனது வீட்டுக்கு ஜேட்லி திரும்பினார். இருப்பினும் உடல்நிலை முழுவதும் சீராகாததால் வீட்டில் இருந்தபடி தனது பணியை செய்து வருகிறார்.