ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி நடந்த வெள்ளிக்கிழமை வழிபாட்டின் போது குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 58 பேர் படுகாயமைடந்தனர்.
இவ்வழக்கு விசாரணையை கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் சிபிஐ-யிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்டது. இதில் 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர்களில் தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, சுவாமி அஸீமானந்த், பரத் மோஹன்லால் ரதேஷ்வர் மற்றும் ராஜேந்திர சௌத்ரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சந்தீப் வி.டாங்கே மற்றும் ராமச்சந்திர கல்சங்கரா ஆகியோர் தப்பிச் சென்றுவிட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சுனில் ஜோஷி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் ஹைதராபாத்தின் நாம்பள்ளியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் திங்கள்கிழமை விடுதலை செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்ற நீதிபதி ரவீந்திர ரெட்டி, திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கிய நிலையில், அவர் இம்முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.