புதுதில்லி: அதிகரித்து வரும் வங்கி ஊழல்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரை நேரில் அழைத்து விசாரிக்க பாராளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.
நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கோடிக்கணக்கான அளவில் பண முறைகேடு நடப்பது தொடர்கதையாகி விட்டது. பி.என்.பி வங்கி மற்றும் தற்பொழுது ஐசிஐசிஐ என இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில் தான் அதிகரித்து வரும் வங்கி ஊழல்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரை நேரில் அழைத்து விசாரிக்க பாராளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரசின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி தலைமையிலான நிதி விவகாரங்களுக்கான பாராளமன்ற நிலைக்குழு கூட்டம் கூடி, செவ்வாயன்று நிதித்துறை செயலர் ராஜிவ் குமாரிடம் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அது தொடர்பாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
நிதி விவகாரங்களுக்கான பாராளமன்ற நிலைக்குழு முன்பு வரும் மே 17 அன்று ஆஜராகுமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் வங்கி ஊழல்கள் தொடர்பாக நிறைய கேள்விகளை எழுப்பவுள்தாகத் தெரிகிறது.
அத்துடன் இத்தகைய தவறுகள் நிகழாமல் தடுக்க வேண்டுமானால் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு என்ன விதமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.