இந்தியாவுடனான உறவை சரியான பாதையில் தொடரவே விருப்பம்: சீனா

தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவுடனான நல்லுறவு மேம்பட்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இருதரப்பு உறவைப் பொருத்தவரை, சரியான பாதையில் நீடிக்கவே

தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவுடனான நல்லுறவு மேம்பட்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இருதரப்பு உறவைப் பொருத்தவரை, சரியான பாதையில் நீடிக்கவே தங்களது நாடு விரும்புவதாகவும் சீனா கூறியுள்ளது.
டோக்கா லாம் பிரச்னை, அருணாசலப் பிரதேச ஊடுருவல் சம்பவம் உள்ளிட்டவற்றால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் இக்கருத்தை சீனா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கா லாம் பிரச்னை காரணமாக கடந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையே அசாதாரண சூழல் நிலவியது. ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனிடையே, கடந்த டிசம்பர் இறுதியில் அருணசாலப் பிரதேசத்தின் பைசிங் பகுதியில் சாலை செப்பனிடும் வாகனங்களுடன் (புல்டோஸர்கள்) சீனப் படைகள் மக்களோடு, மக்களாக ஊடுருவியதும் இருதரப்புக்கும் இடையேயான உறவில் விரிசலுக்கு வித்திட்டது.
அந்தப் பதற்றங்கள் சற்று தணிந்து நிலைமை சுமுகமாகிவிட்டதாகக் கருதியிருந்த நிலையில், சீன வீரர்கள் இந்திய எல்லை அருகே அதி நவீன ஆயுதங்களுடன் முகாமிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்அண்மையில் செய்தி வெளியிட்டன. க்யூடிஎஸ்-11 எனப்படும் நவீன தொழில்நுட்பத்திலான மின்னணு இயந்திர ஆயுதங்கள் ஒவ்வொரு சீன வீரர்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் இந்தியா அதிருப்தியடைந்தது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல், சீன வெளியுறவு விவகாரங்கள் துறை ஆணையர் யாங் ஜேய்சி ஆகியோர் அண்மையில் சந்தித்துப் பேசினர். அதைத் தவிர, இரு நாட்டு பொருளாதாரக் குழு கூட்டத்திலும் இந்திய - சீன பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசித்தனர். அதன் பின்னர் சுமுக நிலை திரும்பியதாகத் தெரிகிறது. 
இந்தச் சூழலில், பெய்ஜிங்கில் பத்திரிகையாளர்களை திங்கள்கிழமை சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங்கிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, இரு நாட்டுப் பிரதிநிதிகளும் பல்வேறு தருணங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இருதரப்பு நல்லுறவும் மேம்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் சரியான பாதையில் நீடிக்கவே சீனா விரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகளையே நாங்கள் முன்னெடுத்து வருகிறோம் என்றார் அவர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 24-ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், சுஷ்மா ஸ்வராஜும் சீனா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com