ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 2-ஆம் தேதி வரை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி பிறப்பித்தார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பரில் முடக்கியது.
இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியும், கைது நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் அந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏப்ரல் 16 வரைஅவரை கைது செய்வதற்கு தடை விதித்தது. அந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி ஓ.பி.சைனி முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை கார்த்தியை கைது செய்வதற்கு தடை விதிப்பதாகத் தெரிவித்தார்.