மருத்துவக் கல்வி இயக்குநர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக மீண்டும் எட்வின் ஜோ நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக
மருத்துவக் கல்வி இயக்குநர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக மீண்டும் எட்வின் ஜோ நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நான்கு வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த எட்வின் ஜோ, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநராக 2017, ஏப்ரல் 25-இல் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி கயிலைராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, எட்வின் ஜோ நியமனத்தை 2017, செப்டம்பர் 20-இல் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் தொடர்பான அரசாணையையும், தனி நீதிபதி உத்தரவையும் 2017, டிசம்பர் 12-இல் ரத்து செய்தது. மேலும், மருத்துவக் கல்வி இயக்குநர் பதவிக்குத் தகுதியான நபரை 6 வாரங்களில் நியமிக்கவும் உத்தரவிட்டிருந்தது. 
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி முடித்து வைக்கப்பட்டது.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேவதி கயிலைராஜன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ளக் கோரி மருத்துவக் கல்வி இயக்குநர் பணிக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றிருந்த டாக்டர் மீனாட்சி சுந்தரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தான் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில், தனக்குத் தொடர்பில்லாத ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் குறிப்பாணை வழங்கப்பட்டது. இதனால் தனக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் பதவி மறுக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், வழக்கு விசாரணையின் போது, 'முறையான விதிகளைப் பின்பற்றியே மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ நியமனம் நடைபெற்றது' என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதிபதிகள்அமர்வு, 'கடந்த பிப்ரவரி 28-இல் பிறப்பித்த உத்தரவில், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ நியமனம் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி விதிமுறைப்படி நடந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது ' எனத் தெரிவித்தது. 
மேல்முறையீடு: இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய டாக்டர் மீனாட்சி சுந்தரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 23-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மருத்துவக் கல்வி இயக்குநர் நியமன விவகாரத்தில் திறமைகளை தமிழக அரசு கருத்தில் கொள்ளவில்லை. 
இந்த விவகாரத்தில் நியமனக் குழு நியாயமாகவும், சுதந்திரமாகவும், முறையாகவும் நடத்து கொள்ளவில்லை. ஆகையால், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் நாகமுத்து, வழக்குரைஞர் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகி, 'தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நியமன விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார். வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com