பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உழைத்து வருபவர்களுக்கும், வாரிசு அரசியல் நடத்தி நாட்டை சீரழித்தவர்களுக்கும் இடையே இப்போது அரசியல் ரீதியாக போர் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தை அனுபவித்து வந்தவர்களுக்கு, இப்போது அது இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாட்டில் ஏதாவது பிரச்னை ஏற்படுத்தி அரசு மீது களங்கம் கற்பிக்க முயலுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகவே நாட்டில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், சிறுபான்மையின மக்கள் ஒடுக்கப்படுவதாகவும் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை.
உண்மையில் நமது பிரதமர் மோடி தலைமையிலான அரசில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.
நாட்டில் பல ஆண்டுகளாக ஊழல் ஆட்சி நடத்தி வந்தவர்களிடம் இருந்து இப்போது நிரந்தரமாக அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் பல்வேறு அரசியல் சதிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், இவை அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையில் நாங்கள் வெல்வோம். என்றார் நக்வி.