நாட்டில் இந்த ஆண்டு பருவமழை சராசரி அளவில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புது தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்த மையத்தின் பொது இயக்குநர் கே.ஜி.ரமேஷ் இதனை தெரிவித்தார்.
நீண்ட கால சராசரி அளவை கணக்கிடும்போது இந்த ஆண்டு பருவமழை 97 சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறினார். பருவமழை பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.
நீண்ட கால சராசரியைக் கணக்கிடுகையில் 96 முதல் 104 சதவீதம் வரை பெய்யக் கூடிய மழை சராசரி அளவாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது கடந்த 50 ஆண்டுகால சராசரி என்றால், அது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் சராசரியாக 89 செ.மீ. மழை பதிவாகும் என்பதே.
அதுவே 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பருவமழை பற்றாக்குறை என்று சொல்லப்படுகிறது.
ஆண்டுதோறும் 4 மாதங்கள் பெய்யக் கூடிய பருவ மழையானது நாட்டின் மொத்த மழை அளவில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இந்த ஆண்டில் பருவமழை எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு மே மாத மத்தியில் வெளியிடப்பட உள்ளது.