நாம் எம்மாதிரியான சமூகமாக உருவாகிறோம் என்பதை அறிய வேண்டும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்ரா எனுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவோ தேவி பல்கலைக்கழகத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
காமன்வெல்த் 2018 போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியாவின் மகள்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு மிகப்பெரிய
சாதனையாகும். மணிகா பத்ரா, மேரி கோம், மீராபாய் சானு, சங்கீதா சானு, மணு பகீர், வினேஷ் போகத், சாய்னா நேவால் மற்றும் ஹீனா சித்து ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளான நிலையில், இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டில் எங்கு நடந்தாலும் அது மிகப்பெரிய அவமானமாகும். நாம் எம்மாதிரியான சமூகமாக உருவாகிறோம் என்பதை அறிய வேண்டும். இனியும் இதுபோன்ற கொடூரச் செயல்கள் நம் நாட்டிலுள்ள எந்தவொரு பெண்ணுக்கும், சிறுமிக்கும் நடைபெறாத வகையில் பாதுகாப்பது நமது சமூகக் கடமையாகும் என்றார்.
பின்னர் பேசிய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி:
மாதா வைஷ்ணவோ தேவியின் மகளுக்கு இதுபோன்ற கொடூரச் சம்பவம் நடந்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது. சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ய அவர்களுக்கு எப்படி மனம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இந்த சமூகத்தில் தான் எதோ தவறு உள்ளது என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவா எனுமிடத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.