தாவூத்துக்கு சொந்தமாக உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 260 பேர் உயிரிழந்தனர். எழுநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிய தாவூத் இப்ராஹிம், இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். தற்போது அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் மும்பையில் தாவூத்துக்கு சொந்தமாக உள்ள சொத்துகளை மத்திய அரசு முடக்கி வைத்தது. இதனை எதிர்த்து அவனது உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆர்கே அகர்வால் தாவூத் சொத்துகளை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். அத்துடன் வழக்கையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.