பாட்னா: பிகாரில் அமலில் உள்ள மது விலக்கை மீறி மது அருந்திய பாரதிய ஜனதா கட்சி எம்.பியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்ச சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்யும் பிகாரில் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து முழுமையான மது விலக்கு அமலில் உள்ளது. அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமலில் உள்ள மது விலக்கை மீறி மது அருந்திய பாரதிய ஜனதா கட்சி எம்.பியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிகார் மாநிலம் கயா தொகுதி பாஜக எம்.பியாக இருப்பவர் ஹரி மஞ்சி. இவரது மகன் ராகுல் குமார் (18). இவர் ஞாயிறன்று புத்த கயாவுக்குஅருகில் உள்ள கிராமம் ஒன்றில் மது அருந்தியதாக இரு நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கயாவுக்கான மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கரிமா மாலிக், 'கைது செய்யப்பட்ட ராகுலிடம் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் அவர் மதுவருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்பொழுது அவர் நீதிமன்ற காவலில் இருக்கிறார்' என்று தெரிவித்தார்.
ஆனால் இது நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது பெயரைக் கெடுக்க நடத்தப்படும் சதி என்று ஹரி மஞ்சி தெரிவித்துள்ளார்.