திருவனந்தபுரம்: செவ்வாயன்று தனது 45-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பரிசாக, கேரளாவில் அவர் பெயரில் நூலகம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். 'கிரிக்கெட்டின் கடவுள்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். அவர் செவ்வாயன்று தனது 45 -ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் பரிசாக, கேரளாவில் அவர் பெயரில் நூலகம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரில் உள்ளது மலபார் கிறிஸ்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக பணியற்றி வருபவர் வசிஷ்ட் மேனிகோத். இவர் தற்பொழுது 'மாஸ்டர் பிளாஸ்டா் சச்சின் தெண்டுல்கர்' என்ற பெயரில் நூலகம் ஒன்றை திறந்துள்ளார்.
இந்த நூலகம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இங்கே உள்ள அனைத்து புத்தகங்களும் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி வெளியான புத்தகங்கள் ஆகும். அப்படிப்பட்ட புத்தகங்கள் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்டவைகள் உள்ளன.
அவற்றில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி மற்றும் ஹிந்தி போன்ற 11 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள புத்தங்கள் அடங்கியுள்ளது.
இவ்வாறு அவா் தெரிவித்தார்.