புதுதில்லி: பாலியல் வன்கொடுமையில் ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
ஆண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளை எதிர்க்கொள்ளும் விவகாரம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் இன்சியா தாரிவாலா, Change.org என்னும் இணையதளம் வழியாக மனு அளித்திருந்தார். அந்த மனுவிற்கு மேனகா காந்தி அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதவது:
சிறார் பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் ஆண் குழந்தைகளின் பாதுகாப்பு புறக்கணிக்கப்படுகிறது. சிறார் பாலியல் துன்புறுத்தல் என்பது பாலியல் வேறுபாடற்றது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண் குழந்தைகள் வாழ் நாள் முழுவதும் அவமானம் மற்றும் கண்ணியம் காரணமாக பேசுவதை தவிர்க்கிறார்கள். இது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும், இதனை நாம் கண்டிப்பாக சரிசெய்ய வேண்டும்.
இவ்விவகாரம் தொடர்பாக மனு கிடைத்ததும், ஆண் குழந்தைகள் பாதிப்பை பார்க்குமாறு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (என்சிபிசிஆர்) 2017 செப்டம்பரில் உத்தரவிட்டேன். இவ்விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின்படி, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிறுமிகளுக்கு கிடைக்கும் நிவாரணம், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் சிறுவர்களுக்கும் கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.