பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மதவாத அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்தி வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
கேரளாவிலுள்ள காந்தி பூங்கா மைதானத்தில் கேரள காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எம்.எம்.ஹாசன் தலைமையிலான ஜன மோட்சன யாத்திரை புதன்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மதவாத அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்தி வருகிறது. இங்கு பெண்கள், தலித், குழந்தைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்திய நாடு முழுவதும் மதவாதம் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் அரசியல் கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக அனைத்து திட்டங்களையும் ஏற்படுத்தி இந்திய ஒருமைப்பாட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சவால் விடுத்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.