கோரக்பூர் சம்பவம்: மருத்துவருக்கு ஜாமீன்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், கைது செய்யப்பட்டிருந்த

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், கைது செய்யப்பட்டிருந்த மருத்துவர் காஃபீல் அகமது கானுக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.
 கடந்த ஆண்டு ஆகஸ்டில் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 60-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் இரு நாள்களில் அடுத்தடுத்து உயிரிழந்தன. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
 சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கும் துறையின் தலைவராக இருந்த மருத்துவர் காஃபீல் அகமது கான் செப்டம்பரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது.
 இதையடுத்து அவர் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி மேல்முறையீடு செய்திருந்தார். அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நீதிமன்றம், சம்பவம் தொடர்பாக மாநில அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யஅவகாசம் அளித்திருந்தது.
 இந்நிலையில், 7 மாதமாக சிறையில் இருக்கும் மருத்துவர் காஃபீல் அகமது கானுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி யஷ்வந்த் வர்மா உத்தரவிட்டார்.
 முன்னதாக, காஃபீல் அகமது கான் சிறையில் இருந்தபோது தனது மனைவியும், மருத்துவருமான ஷாபிஸ்தா கானுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஷாபிஸ்தா கான் சமீபத்தில் ஊடகங்களில் வெளியிட்ட அந்தக் கடிதத்தில், "உயரதிகாரிகளின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த சம்பவத்துக்கு தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்' என்று காஃபீல் அகமது கான் குற்றம்சாட்டியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com