தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்டார். சிறுநீரக பாதிப்புக்காக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து கொண்ட பிறகு, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.
சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை எடுப்பதற்கு தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜேட்லி கடந்த 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 3 நாள்களுக்குப் பிறகு ஜேட்லி வீடு திரும்பினார்.
எனினும், தனது அலுவலக பணிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடி ஜேட்லி செய்து வருகிறார். கடந்த 3 வாரங்களாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. மத்திய நிதியமைச்சக அலுவலகத்துக்கும் அவர் செல்லவில்லை.
இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சுமார் 90 நிமிடங்களுக்கு நீடித்த இக்கூட்டத்தில் ஜேட்லியும் கலந்து கொண்டார். எனினும், மத்திய நிதியமைச்சக அலுவலகத்துக்கு ஜேட்லி செல்லவில்லை.
முன்னதாக, இந்தியா வந்திருந்த ஜப்பான் தூதர் கென்ஜி ஹிரமட்ஸýவையும் ஜேட்லி தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு ஜேட்லி தலைமை தாங்கி நடத்தலாம் எனத் தெரிகிறது.