புதுதில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை, மே 7-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கதுவாவில் இருக்கும் பழங்குடியின இஸ்லாமியர்களை மிரட்டும் வகையில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்து உள்ளது. சிறுமிக்கு நீதி வேண்டும் என இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
தற்பொழுது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சி ராம், விஷால் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பில், நேர்மையான விசாரணை நடைபெற விசாரணையை சண்டிகாருக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.எம்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை, மே 7-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெள்ளி அன்று இந்த வழக்கானது மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் டி.எம்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் தரப்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில், ஜம்மு மாநில நீதிமன்றத்தில் நிலவும் குழப்பமான சூழல் குறித்து அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்திலேயே தெரிய வருகிறது என்று கூறினார்.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறும் பொழுது இந்த வழக்கானது, ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை குற்றப் பிரிவின், சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்கிறது; எனவே தனியாக சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று வலியுறுத்தினார்.
அது சமயம் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும் பொழுது, இந்த வழக்கில் மத்திய அரசு எந்த உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது.ஆனால் அது பற்றிய முடிவை காஷ்மீர் அரசுதான் எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார்.
பின்னர் வழக்கு விசாரணையை மே 7-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்பொழுது சிறுமியின் தந்தை மற்றும் குற்றவாளிகள் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தது.