ஐக்கிய ஜனதா தள அதிருப்தி தலைவரான சரத் யாதவின் ஆதரவாளர்கள் "லோக்தந்த்ரிக் ஜனதா தளம்' என்ற பெயரில் புதிய கட்சியை வியாழக்கிழமை தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பிளவு பட்டது, அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. எனினும், புதிய கட்சியில் தாம் உறுப்பினராகவில்லை என்று தெரிவித்துள்ள சரத் யாதவ், அக்கட்சிக்கு தனது ஆசீர்வாதங்கள் உண்டு என்று தெரிவித்துள்ளார்.
லோக்தந்த்ரிக் ஜனதா தளக் கட்சியின் தொடக்கம் குறித்த அறிவிப்பை, அக்கட்சியின் தேசிய செயலர் சுஷிலா மொராலே வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார். அப்போது, சரத் யாதவும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய கட்சியின் தேசிய மாநாடு மே 18-ஆம் தேதி நடைபெறும் என்றும், சரத் யாதவ் ஒரு ஆலோசகராக அதில் கலந்துகொள்வார் என்றும் சுஷிலா அப்போது தெரிவித்தார்.
சரத் யாதவ் தலைமையிலான பிரிவினர், ஐக்கிய ஜனதா தளத்தின் அம்பு சின்னத்துக்கு உரிமை கோரியதை தேர்தல் ஆணையம் நிராகரித்ததை அடுத்து, அதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அத்துடன், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தாம் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரத் யாதவ் தில்லி உயர் நீதிமன்றத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் நாடியிருந்தது நினைவுகூரத்தக்கது.