புதுதில்லி: தில்லி ஜூம்மா மசூதியில் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்க இஸ்லாமிய ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை என்ற தில்லி அரசின் தகவலால் சர்ச்சை எழுந்துள்ளது.
புதுதில்லியில் உள்ள சிறுபான்மை ஆணையத்தின் சார்பாக, இஸ்லாமிய ஆசிரியர்கள் வெள்ளிதோறும் தில்லி ஜூம்மா மசூதியில் நடைபெறும் தொழுகைக்குச் செல்ல அனுமதி வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு தில்லி அரசின் வாயிலாக கல்வித் துறை அளித்த பதில் குறித்து தில்லி சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜராஃபுல் இஸ்லாம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியாதவது:
ஆசிரியர்களுக்கு வகுப்பிலிருந்து வெள்ளிக்கிழமைதோறும் ஜூம்மா தொழுகைக்குச் செல்ல அனுமதியில்லை என்றும் அது மாணவர்களின் நலன்களைப் பாதிக்கும் என எழுத்துபூர்வமாக பதிலளித்திருந்திருந்தனர்.
ஆசிரியர்கள் பள்ளிக்கு மதியம் 1 மணிக்கு தொடங்கும் வகுப்புகளுக்காக பகல் 12.45க்கே பள்ளிக்கூடத்திற்கு இதனால் விதிமுறைகளை தளர்த்தமுடியாது என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் 1954ல் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வெளியான ஒரு உத்தரவின் படி ஊழியர்கள் தங்கள் மாத ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அவர்கள் தொழுகைக்குச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவு இன்னும் அமலில் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உள்துறை அமைச்சகத்திற்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்''
இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, இப்பிரச்சனை தொடர்பாக ஆசிரியர்கள் ஆணையத்தை அணுகி இஸ்லாமிய ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் கல்வித்துறைக்கும் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது