இணையதள தரவுகளைப் பாதுகாக்க வலுவான சட்டம் கொண்டு வருவது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது இணையதள தரவுகளைப் பாதுகாக்க வலுவான சட்டம் இயற்றுவது குறித்து கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் கே.அசோக்குமார் பேசுகையில்,
"பல்வேறு இணையதள பரிவா்த்தணைகளின்போது இணையதள குற்றங்கள் (சைபா் கிரைம்) அதிகரித்து வருகின்றன. தரவுகளைப் பாதுகாப்பது என்பது அரசுக்கு கடினமான பணியாக இருந்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் விதிமீறலில் ஈடுபடுவோர் தப்பிக்க வழிவகை செய்வதாக உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் விரிவான தரவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதில் அளித்து பேசியதாவது:
"மிக முக்கியமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. எந்தவொரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் அங்கு தரவு இருக்கும். ஆனால், இதற்கு சமநிலை அணுகுமுறையை நாம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதொடர்பான ஆலோசனைகளை அளிப்பதற்காக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் முன்மொழிவு வரைவு சட்டமும் உள்ளது.
இதுதொடர்பாக அவை உறுப்பினர்களின் கருத்தையும் கேட்டறிய விரும்புகிறேன். விரைவில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன். எனது துறையின் செயலர் அனைத்து தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் எழுத உள்ளார்.
அப்போதுதான், மாநில அரசுகளிடமிருந்து கருத்துகள் பெற முடியும். தரவு பாதுகாப்பு சட்டம் தொடர்பாக அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்கு முன் அவையில் அது தொடர்பாக விவாதிக்கப்படும். அப்போதுதான், நமக்கு ஒரு வலுவான தரவு பாதுகாப்பு சட்டம் கிடைக்கும்" என்றார்.