தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர் ராஜபட்ச ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுட்டுரையில் சிறீசேனா வெளியிட்ட பதிவில், அனுபவம் வாய்ந்த இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி காலமான செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகையில், மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' என்றார்.
சுட்டுரையில் ராஜபட்ச வெளியிட்ட பதிவில், தமிழ் இலக்கியம், திரைப்படம், அரசியல் ஆகிய துறைகளில் கருணாநிதியின் பங்களிப்பு ஈடு செய்ய முடியாதவை. அவரை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகையில் இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர் கருணாநிதி. அவர் மேலும் அழுத்தம் கொடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடக்காமல் தடுத்திருக்கலாம்' என்றார்.