கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிடுகிறார்.
கேரளாவில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை மற்றும் நிலச்சரிவால் இரு தினங்களில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏராளமான சாலைகள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மேலும், மத்திய அரசு உதவி செய்வதாக அவரிடம் உறுதியளித்தார்.
இந்நிலையில், அவர் வரும் ஞாயிற்றுக்கிழமை கேரளாவுக்கு நேரில் சென்று வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரளாவுக்கு செல்லும் அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.