ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் உமர் காலித்தை நாடாளுமன்றம் அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றார். ஆனால், அதிர்ஷ்டவசமாக உமர் காலித் உயிர் தப்பினார்.
ஜேஎன்யு மாணவர் சங்க தலைவரான உமர் காலித் ஒரு அமைப்பு நடத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றம் அருகே உள்ள கிளப்புக்கு சென்றிருந்தார். அந்த கிளப்பின் நுழைவாயிலில் வைத்து மர்ம நபர் ஒருவர் உமர் காலித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். ஆனால், உமர் காலித் அதிர்ஷ்டவசமாக குண்டு படாமல் பிழைத்தார்.
அதன்பிறகு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இன்னும் இரு தினங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாடாளுமன்றம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உமர் காலித் ஏற்கனவே தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த ஜூன் மாதம் தில்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2016-இல் நடைபெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி தொடர்பாக உமர் காலித் மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக புகார் எழுந்தது.