பிரதமரின் கண்டனத்தைத் தொடர்ந்து, கும்பல் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டில் கும்பல் தாக்குல் சம்பவங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்த நிலையில், அந்தச் சம்பவங்களுக்கு எதிராக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கும்பல் தாக்குதலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என்று அந்தப் பதிவில் மெஹபூபா முஃப்தி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கும்பல் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
"கும்பலாகச் சேர்ந்து தாக்குதல் நடத்துவது குற்றச் செயலாகும். அவர்கள், எந்தக் காரணத்தின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது முக்கியமல்ல. எந்தச் சூழலிலும் யாரும் சட்டத்தை கையில் எடுத்து வன்முறைச் செயலில் ஈடுபடக் கூடாது. நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் கும்பல் வன்முறை நடந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்' என்று அவர் கூறியிருந்தார்.