பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சி.டி. நகலை கோரி மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரவு நேரத்தில் காரில் கடத்தி செல்லப்பட்டு ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி என்பவர், நடிகர் திலீப் தூண்டுதலின் பேரிலேயே நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து, அதை விடியோவாக எடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் திலீப்பை கேரள போலீஸார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.
இருப்பினும், இந்த வழக்கில் 3 மாதங்களுக்குப் பிறகு, திலீப் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுத்ததாக கூறப்படும் விடியோ அடங்கிய சி.டி. நகலை அளிக்கக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் திலீப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுனில் தாமஸ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சி.டி. நகலை நடிகர் திலீப்பிடம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில், சி.டி. நகலை அளிப்பதால், நடிகைக்கு பாதிப்பு ஏற்படும்' என்றார். இதைத் தொடர்ந்து, நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை நீதிபதி சுனில் தாமஸ் தள்ளுபடி செய்தார்.