மெட்ரோ ரயில் இயக்கும் கட்டுப்பாட்டு மையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் கொச்சியில் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அந்த மாநிலம் முற்றிலுமாக வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 39 அணைகளில் 33 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அந்த மாநிலத்தில் இதுவரை 73 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இடுக்கி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஆலுவா நகரம் அதிகளவு பாதிக்கப்பட்டு மற்ற இடங்களில் இருந்து தனிமையாக்கப்பட்டது.
கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில்களை இயக்கும் கட்டுப்பாட்டு மையம் ஆலுவா நகரத்தின் அருகே உள்ள முட்டம்யார்ட் பகுதியில் அமைந்துள்ளது. அந்த கட்டுப்பாட்டு மையத்திலும் வியாழக்கிழமை வெள்ளம் சூழ்ந்ததால் மெட்ரோ ரயில் சேவையை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீரின் அளவு குறைந்தால் மட்டுமே மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து அது நிறுத்தப்படுவது இது தான் முதல்முறை.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், "மற்ற இடங்களில் இருந்து முற்றிலுமாக தனிமையாக்கப்பட்டுள்ள ஆலுவா நகரத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவையை இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆலுவாவில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு உதவும் வகையில் மெட்ரோ சேவையை மீண்டும் துவங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அங்கு மோசமான சூழ்நிலை நிலவி வருவதால் அவசர சேவைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றார்.