அடல் பிகாரி வாஜ்பாய் இறுதி அஞ்சலி விவரங்கள்
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.
இதையடுத்து, ஆகஸ்டு 22-ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்டு 22-ஆம் தேதி வரை நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
வாஜ்பாய் இறுதி ஊர்வலம் தில்லியில் உள்ள அவரது கிருஷ்ணா மேனன் மார்க் பகுதியில் அமைந்திருக்கும் இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தீன தயாள உபாத்யாய மார்க் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக தலைமையகத்துக்கு இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கொண்டு செல்லப்படுகிறது.
பின்னர், தில்லி கேட் மற்றும் ராஜ்கட் பகுதிகளில் இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவர்கள், துணைக் குடியரசுத் தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் உள்ளிட்டோரின் இறுதி சடங்குகள் நடைபெறும் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்மிருத்தி ஸ்தல் பகுதியில் இறுதி சடங்குகளுக்காக மதியம் 1.30 மணியளவில் வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் வாஜ்பாய்-க்கு நினைவிடம் அமைக்க 1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.