கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
மாநிலம் முழுவதும் 1,65,538 ஆயிரம் பேர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் மாநிலம் முழுவதும் 2,857 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. 3,393 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நாசமடைந்தன. இதுவரை மொத்தம் 2,857 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளன.
வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை, விமானப்படை, தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைக்கும் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகஸ்டு 9-ஆம் தேதி முதல் தற்போது வரை இந்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 94-ஆக அதிகரித்துள்ளது. வெள்ள பாதிப்புகளில் சிக்கி மாயமான 11 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 41 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவுக்கு கூடுதலாக 12 தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவினர் வந்தடைந்துள்ளனர். அதுபோல இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.