மறைந்த தலைவர்கள் ராம் மனோகர் லோஹியா, பீம் ராவ் அம்பேத்கர் ஆகியோரது கனவுகளை பூர்த்தி செய்யவே, சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்திருப்பதாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் உள்ள சமாஜவாதி கட்சி தலைமையகத்தில் நாட்டின் சுதந்திர தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து, அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
நீதிக்காகவும், நாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காகவும் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்று லோஹியாவும், அம்பேத்கரும் வலியுறுத்தி வந்தனர். அவர்களது இந்த கனவை பூர்த்தி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாட்டின் எதிர்காலத்தை ஒற்றுமை, சமூக சமத்துவம், சிறப்பான பொருளாதாரம் ஆகியவற்றாலேயே வலுப்படுத்த முடியும். இதுவும், லோஹியா, அம்பேத்கர் ஆகியோரது கனவுதான். கடந்த 1956ஆம் ஆண்டில் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதி, இணைந்து செயல்படுவதென்று முடிவெடுத்தனர். ஆனால், 1956ஆம் ஆண்டில் அம்பேத்கர் உயிரிழந்து விட்டார். ஆனால், தற்போது அந்த கனவை பூர்த்தி செய்யும் சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்துள்ளது.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக, ஆளும் கட்சியால் எதிர்க்கட்சியினர் சேறு' என்று விமர்சிக்கப்படுகின்றனர்.
சுதந்திரத்துக்கு பிறகு, நாட்டின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கானோர் பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால், கடந்த 71 ஆண்டுகளாக எந்த பணியுமே நடக்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் தெரிவிப்பது, அவர்களது பங்களிப்பை இழிவுப்படுத்தும் செயலாகும்.
மத்தியில் உள்ள பாஜக அரசின் ஆட்சியின்கீழ், ஜனநாயகத்தின் அனைத்து தூண்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நீதிபதிகளே தெரிவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் ஒருசார்பாகி விட்டனர். ஊடகத்தின் நிலை நமக்கே தெரியும்.
வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 2 கோடி இளைஞர்கள் முதன்முறையாக வாக்களிக்கவுள்ளனர். வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, வெறுப்புணர்வை மத்திய அரசு பரப்பி வருகிறது. இதன்மூலம் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு மூடிமறைக்கிறது என்றார் அகிலேஷ் யாதவ்.