தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் (93) கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர், சிறுநீரக பாதை தொற்று, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது.
இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பில், துரதிருஷ்டவசமாக, கடந்த 24 மணி நேரமாகவே, வாஜ்பாய் உடல்நிலை மோசமாகி வந்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு 7.15 மணியளவில் நேரில் வந்தார். சுமார் 50 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த மோடி, வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பியூஷ் கோயல், சுரேஷ் பிரபு, ஜிதேந்திர சிங், ஹர்ஷவர்த்தன், ஷாநவாஸ் ஹுசேன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வந்து வாஜ்பாய் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
பாஜக முதுபெரும் தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய், உடல்நிலை பாதிக்கப்படவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.