கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் கேரளாவுக்கு தில்லி மற்றும் பஞ்சாப் அரசுகள் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கியது.
சுதந்திர இந்தியாவில் வரலாறு காணாத மழை காரணமாக கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை மாலை டிவிட்டரில் கூறுகையில், "கடந்த 100 ஆண்டுகளில் காணாத மிகவும் மோசமான வெள்ளத்தை கேரளா சந்தித்து வருகிறது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளது, 324 பேர் உயிரிழந்துள்ளனர், 1500 நிவாரண முகாம்களில் 2,23,139 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
கேரளாவின் நிலையை கண்டு ஏற்கனவே பல மாநில அரசுகள் கேரளாவுக்கு நிதியுதவி செய்துவருகின்றனர். மத்திய அரசும் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் அரசு கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவியும், ரூ.5 கோடி மதிப்பில் நிவாரண பொருட்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தில்லி அரசு ரூ.10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கேரளாவுக்கு நிதி வழங்குவதற்கான தகவலை பதிவிட்டிருந்த கேரள முதல்வரின் பதிவை பகிர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "கேரள முதல்வரிடம் பேசினேன். தில்லி அரசு தனது பங்களிப்பாக ரூ.10 கோடியை செலுத்துகிறது. நமது கேரள சகோதர சகோதரிகளுக்கு அனைவரும் நிதியதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்" என்றார்.
கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகை நயன்தாராவும் வெள்ளிக்கிழமை ரூ.10 லட்சம் வழங்கினார்.