வாஜ்பாய் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தில்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உடலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வந்து பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள், அதிகாரிகள் என அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராணுவ தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி சுனில் லம்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து வாஜ்பாயின் உடல் கிருஷ்ணா மேனன் பார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.