கொச்சி விமான நிலையம் 26-ஆம் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் கொச்சி கடற்படை விமான தளம் மூலம் திங்கள்கிழமை முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால், கொச்சி விமான நிலையம் 26-ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கொச்சியில் இருந்து விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கொச்சி கடற்படை விமான தளம் மூலம் கொச்சிக்கு திங்கள்கிழமை முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,
"கொச்சி விமான நிலையத்தில் இருந்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா அலையன்ஸ் மூலம் பெங்களூரு - கொச்சி இடையே கொச்சி கடற்படை விமான தளம் மூலம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்தை துவங்க மத்திய விமானப் போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் இருந்தும் விமான சேவை தொடங்கப்படவுள்ளது. மற்ற விமான நிறுவனங்களும் இந்த சேவையில் இணைவதற்கு வாய்ப்புள்ளது" என்றார்.
இதையடுத்து, திங்கள்கிழமை கொச்சிக்கும், கொச்சியில் இருந்தும் செல்லும் விமான அட்டவணையையும் அவர் வெளியிட்டார்.