முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்த மண்ணைவிட்டு மறைந்துவிட்டபோதிலும், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் என்றும் வாழ்வார் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
வாஜ்பாயின் இறுதிச் சடங்குக்குப் பிறகு சுட்டுரையில் அவரை நினைவுகூர்ந்து மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது: நமது நாட்டை கட்டமைப்பதிலும், முன்னேற்றுவதிலும் வாய்பாயின் பங்களிப்பைக் கூற வார்த்தைகள் போதாது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜாதி, மத இன வேறுபாடுகளை கடந்து மக்கள் திரண்டனர். தேசமே அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தியது.
அவரைப் போல நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்களை காண்பது அரிது. நமது நாடு இப்போது பொருளாதாரரீதியாக அடைந்து வரும் பலன்கள் அனைத்துக்கும் அவர் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளும் முக்கியக் காரணம். தனிப்பட்ட முறையில் எனது வழிகாட்டியாகவும், ஆசானாகவும், முன்னுதாரணமாகவும் இருந்தவர் வாஜ்பாய். அவர் காட்டிய பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். அவர் எனக்கு குஜராத் முதல்வர் பதவியை அளித்தது இப்போதும் நினைவிருக்கிறது. 2001 அக்டோபரில் ஒருநாள் மாலை என்னை தொலைபேசியில் அழைத்து குஜராத் முதல்வர் பொறுப்பை ஏற்குமாறு கூறினார். அப்போது, கட்சிப் பணியில் இருப்பது குறித்து அவரிடம் கூறினேன். அதற்கு, குஜராத் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உன்னால் மட்டுமே முடியும் என்று நம்பிக்கை அளித்தார். அதுவே இப்போதும் எனக்கு உத்வேகம் அளித்து வருகிறது என்று கூறியுள்ளார்.