வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உருக்குலைந்துள்ள கேரள மாநிலத்தைப் பார்வையிடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் வந்தார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கேரள ஆளுநர் பி.சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கேரளத்துக்குப் புறப்படும் முன், முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, வெள்ள பாதிப்பு நிலைமை குறித்து கேட்டறிந்தார். முன்னதாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது: கடந்த சில நாள்களாக, பிரதமரின் எண்ணம் முழுவதும் கேரள மக்களின் துயரத்தைப் பற்றியே இருந்தது. இந்த நிலையில், கேரளம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சனிக்கிழமை பார்வையிடுவார். அதைத் தொடர்ந்து, வெள்ள பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பினராயி விஜயனுடன் மோடி கலந்தாலோசிக்கவுள்ளார். பின்னர், ஹெலிகாப்டரில் பயணம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அவர் ஆய்வு செய்யவுள்ளார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.