பிஎஸ்என்எல் வழக்கு: கலாநிதி மாறன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தன்னை விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக
பிஎஸ்என்எல் வழக்கு: கலாநிதி மாறன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்


பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தன்னை விடுவித்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கலாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு கலாநிதி மாறனின் மனுவை நிராகரித்ததை அடுத்து, இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
முன்னதாக, இதேபோன்ற மனுவை தயாநிதி மாறன் தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாநிதி மாறனுக்கு கடந்த ஜூலை 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள், பிஎஸ்என்எல் பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கௌதமன், சன் டி.வி. ஊழியர் கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 
இந்த வழக்கு விசாரணை சென்னை 14 -ஆவது சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. 
இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com